முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து, ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பழமையான கோயில்கள் பாதுகாப்பு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து, ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பழமையான கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, இந்துசமய அறநிலையத்துறை தரப்பில்,தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ளன. இதில் 8,450 கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை புராதன கோயில்களாக கருதப்படுகின்றன. 44 ஆயிரம் கோவில்களில் 32 ஆயிரத்து 935 கோவில்கள் நல்ல நிலையில் உள்ளன. சிறிய சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய நிலையில் 6,414 கோயில்கள் உள்ளன. 

பாதி சிதிலமடைந்துள்ள நிலையில் 530 கோயில்களும், முழுமையாக சிதிலமடைந்துள்ள நிலையில் 716 கோவில்களும் உள்ளன.பாதி சிதிலமடைந்த, முழுமையாக சிதிலமடைந்த இந்த கோயில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோயில்களை பாதுகாக்க வேண்டும். 

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்கள் இடமிருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்ட  பட்டியலை தயாரிக்க வேண்டும். கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்த சிலைகளை பாதுகாக்க நடடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும். 

மாநில, மாவட்ட அளவில் ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக  குழுக்கள் அமைக்க வேண்டும். சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட  வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும். அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும்.

கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும். கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும். கோயில்களுக்குச் சொந்தமான நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்கள், சொத்துக்களை திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை தமிழக அரசு 12 வாரங்களில் அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →