தில்லி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசக்கூடாது என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
மலையாள மொழி பேசும் செவிலியர்கள் மனம் புண்பட்டிருந்தால் மனிக்க வேண்டும் என்று தில்லி ஜிடி பந்த் மருத்துவமனையின் செவிலியர்கள் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’தவறான கண்ணோட்டத்தில் மலையாள மொழி பேசக்கூடாது என்று தடை விதிக்கவில்லை என்றும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு ஏற்படவில்லை. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தில்லி ஜிடி பந்த் மருத்துவ மனையில் பணிபுரியும் கேரளாவைச் சோ்ந்த செவிலியா்கள் தங்கள் தாய்மொழியான மலையாளத்தில் பேசுவதற்குத் தடை விதிக்கும் சுற்றிக்கையை தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றது.
ஜிடி பந்த் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு வராத அல்லது உத்தரவு இல்லாமல் மருத்துவமனையின் நா்சிங் கண்காணிப்பாளரால் இந்த சுற்றிக்கை விடப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.