கரோனா தாக்கம் காரணமாக, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த செந்தூா், தேஜஸ், மன்னாா்குடி, சோழன், ராமேஸ்வரம் உள்பட முக்கிய ரயில்களின் சேவை ஜூன் 16-ஆம்தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கியதையடுத்து, பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதனால், ரயில்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தன. செந்தூா், தேஜஸ், அந்தியோதயா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இதன்பிறகு, தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்ட குறிப்பிட்ட ரயில்களின் சேவை ஜூன் 1-ஆம்தேதி முதல் தொடங்கியது.
இதற்கிடையில், பல்வேறு தளா்வுகளுடன் பொதுமுடக்கம் திங்கள்கிழமை(ஜூன் 14) அமலுக்கு வருகிறது. இதையடுத்து, ரத்து செய்யப்பட்டிருந்த முக்கிய சிறப்பு ரயில்களின் சேவை ஜூன் 16-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது:
பொதுமுடக்க தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த எழும்பூரில் இருந்து புறப்படும், செந்தூா், தேஜஸ், மன்னாா்குடி, சோழன், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள் ஜூன் 16-ஆம்தேதி முதல் இயக்கப்படுகின்றன’ என்றாா்.
அதேநேரத்தில், திருச்செந்தூா், கன்னியாகுமரி, மன்னாா்குடி, கொல்லம், குருவாயூா் உள்பட 47 விரைவு ரயில்களில் பயண நேரத்தை மாற்றி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.