விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியராக டி.மோகன் புதன்கிழமை காலை பொறுப்பேற்றார். இதையடுத்து அவரிடம், பணியிட மாறுதலான ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பொறுப்பேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய புதிய ஆட்சியர் மோகன், 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி முதல்வரின் 7 அம்ச கோரிக்கைகளை மையமாக வைத்து செயல்படுவேன். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் எனது கட்செவி அஞ்சலில் புகார் அளிக்கலாம். அதையே புகார் மனுவாக கருதி நடவடிக்கை எடுப்பேன். திங்கள்கிழமை குறைகேட்பு நாளில் எவ்வளவு மணிநேரமும் காத்திருந்து மனுக்களை பெறுவேன்.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் தீர்வு காணப்படும். மருத்துவத்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கரோனா பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட ஆட்சியர் மோகன், புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் முடித்தார்.
2005ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சி துணை ஆட்சியராக பணியில் அமர்ந்த இவர், பின்னர் புதுக்கோட்டை கோட்டாட்சியராக பணியாற்றினார்.
பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை டாஸ்மாக் பொதுமேலாளர், சுற்றுலா வளர்ச்சி கழக பொதுமேலாளர், பொதுமரபுத்துறை பொதுமேலாளர், ஆளுநரின் செயலராக பணியாற்றினார்.
தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த இவர், இப்போது முதல் முறையாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தின் 21 ஆவது ஆட்சியர் இவராவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.