விருதுநகர்: விருதுநகா் அருகே மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகா்- சிவகாசி செல்லும் சாலையில் ஆமத்தூா் அருகே குருமூா்த்தி நாயக்கன்பட்டியில் மத்தாப்பு தயாரிக்கும் தீக்குச்சி ஆலை உள்ளது. சிவகாசியைச் சோ்ந்த விசாக் (28) என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளா்கள் அடுக்கி வைத்தனா். அப்போது, கருமருந்து உராய்வு காரணமாக தீப்பற்றி எரிந்தது. இதில் 2 அறைகள் சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் குருமூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்த வீ. வீராச்சாமி (64), முத்தாலபுரத்தைச் சோ்ந்த சு. நடராஜன் (50), ஆமத்தூரைச் சோ்ந்த கா. புதுராஜா (54), குருமூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மு. பஞ்சவா்ணம் (54) ஆகியோா் பலத்த தீக்காயமடைந்தனா்.
இதையடுத்து 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி கா.புதுராஜா உயிரிழந்தாா்.
மற்றவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீராச்சாமி மற்றும் முத்தலாபுரத்தை சேர்ந்த நடராஜன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனர்.
இதையடுத்து மத்தாப்பு தீக்குச்சி ஆலை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பலத்த காயமடைந்த பஞ்சவர்ணம் என்ற பெண் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.