திமுக, காங்கிரஸ் கட்சிகள் பொய்யையே மூலதனமாக கொண்டு செயல்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த சட்டப்பபேரவை வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது: கடந்த தேர்தல்களில் சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிமுகவுக்கு பிரதிநிதிகள் இல்லாததால் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறாமல் உள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் இங்கு பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
நாகர்கோவிலில் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் வருவதாக எதிர்க்கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமைக்கப்படமாட்டாது. மீனவர்களும் பொதுமக்களும் பொய் செய்தியை நம்ப வேண்டாம்.
பொய்யை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் கட்சி திமுக, காங்கிரஸ். கடந்த 10 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று தவறான தகவலை பரப்புகிறார்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சி இருண்ட ஆட்சி. குமரி மாவட்டம் வளர்ச்சி பெற தமிழகம் தொடர்ந்து வெற்றி நடை போட அதிமுக பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார் முதல்வர் பழனிசாமி.