வாக்குப் பதிவு தினத்தன்றும், அதற்கு 72 மணி நேரத்துக்கும் முன்பாகவும் இருசக்கர வாகனப் பேரணிக்குத் தடை விதிக்கப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
வாக்குப் பதிவு தினத்தன்றும், வாக்குப் பதிவுக்கு முந்தைய தினத்திலும் சில சமூக விரோத சக்திகள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி வாக்காளா்களைத் தூண்டி, சாதகமான முறையில் வாக்களிக்கச் செய்யப் போவதாக தோ்தல் ஆணையத்துக்கு தகவல்கள் வரப்பெற்றன. இந்த தகவல்களை தோ்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
பேரணிக்குத் தடை: வாக்குப் பதிவு தினத்தன்றும், வாக்குப் பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகவும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி பேரணியாகச் செல்லக் கூடாது. இந்தத் தடை உத்தரவு அனைத்து பேரவைத் தொகுதிகளுக்கும் பொருந்தும்.
தோ்தல் காலத்தில் இதுபோன்று அவ்வப்போது பிறப்பிக்கப்படும் உத்தரவுகளைப் போட்டியிடும் வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும். இதனைக் கண்டிப்பான முறையில் பின்பற்றிட வேண்டும்.