நெல்லை அருகே மதுக்கூட உரிமையாளர் வெட்டிக்கொலை
திருநெல்வேலி அருகேயுள்ள திருப்பணிகரிசல்குளம் பகுதியில் மதுக்கூடம் நடத்தி வந்தவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள திருப்பணிகரிசல்குளம் பகுதியில் மதுக்கூடம் நடத்தி வந்தவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டை அருகேயுள்ள மயிலபுரத்தைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (54). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கொண்டாநகரம்-திருப்பணிகரிசல்குளம் சாலையில் டாஸ்மாக் கடை அருகே மதுக்கூடம் நடத்தி வந்தார். அதன் அருகே அவரது தோட்டமும் உள்ளதாம். அங்கு தங்கியிருந்த கருத்தப்பாண்டி, புதன்கிழமை காலையில் கோயிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அங்கிருந்த கருத்தப்பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், பலத்த காயமடைந்த கருத்தப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
தகவலறிந்ததும் சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதீப், சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் ஜீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடுதிருடும் கும்பலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்த முன்விரோதத்தில் கருத்தப்பாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.