மே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழகம் முழுவதும் மே 24 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. முன்பு அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி, தேநீர், காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் பிற்பகல் 12 மணிவரை இயங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை 17.05.2021 காலை 6 மணி முதல் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.