ஈரோடு: ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையத்தை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் பொறியியல் கல்லூரியில் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொற்று அறிகுறி உள்ளவர்களை பரிசோதனை செய்து அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துதல் மற்றும் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், 200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு கரோனா சிகிச்சை மையம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர். சரஸ்வதி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சௌந்தரம், ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணியம், மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.