துறையூர்: துறையூர் காவல் நிலையம் முன்பு வியாழக்கிழமை இருப்போர் கொடுக்க இல்லாதோர் எடுக்க என்ற மையக் கருத்தின் அடிப்படையில் அன்பு சுவர் அமைக்கப்பட்டது.
ஜேசிஐ (Junior Chamber of international) என்ற பன்னாட்டு அமைப்பின் துறையூர் கிளை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியன இணைந்து துறையூர் காவல் நிலையம் முன்பு இருப்போர் கொடுக்க இல்லாதோர் எடுக்க என்ற மையக்கருத்து அடிப்படையில் அன்பு சுவர் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இதனை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் தொடக்கி வைத்தார்.
அன்புச்சுவரை தொடக்கி வைத்து பார்வையிடும் எஸ்பி மயில்வாகனன்
நிகழ்ச்சியில் முசிறி, திருச்சி கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரன், முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் பிரமானந்தம், துறையூர் காவல் ஆய்வாளர் ஏ.ஆர்.விதுன்குமார், எஸ்ஐ சேகர், எழுத்தர் செந்தில்குமார், ஜேசிஐ துறையூர் கிளைத் தலைவர் ரமேஷ்குமார் செயலர் வி. சுதாகர் எம்.கிருபாகரன், துணைத் தலைவர் ஜே. ஜான் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்புச் சுவரில் முகக் கவசம் பிஸ்கட் பல் துலக்கும் ப்ரஸ்- பேஸ்ட், உணவு பொட்டலங்கள், பழ வகைகள், ரொட்டிகள், புதிய பழைய உடைகள், குடிநீர், தட்டு டம்ளர், சானிடைசர், ஆகியன வைக்கப்பட்டிருந்தது. இதனை தேவைப்படுவோர் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பமுள்ளோர் தன்னால் இயன்ற உதவிப் பொருள்களை அன்பு சுவரில் வைக்கலாம். அன்புச் சுவர் அருகே வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் உதவி தேவைப்படுவோர் அதில் பதிவு செய்தால் ஜேசிஐ அமைப்பினர் நேரடியாக சென்று கோரிய உதவியை செய்வார்கள்.