முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் பள்ளி: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து மாணாக்கர்களுக்கு சீருடை மற்றும் புத்தகப்பை வழங்கினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் பள்ளி: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்
பகிர்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து மாணாக்கர்களுக்கு சீருடை மற்றும் புத்தகப்பை வழங்கினார்.

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணாக்கர்களுக்கு சீருடை மற்றும் புத்தகப்பை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை, கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த சீதா கிங்க்ஸ்டன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை இந்து சமய அறநிலையத் துறை ஏற்று, பெயர் மாற்றம் செய்யப்பட்ட காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தகப் பைகளை வழங்கினார்.

காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 32 கிரவுண்ட் இடத்தில் சீதா கிங்க்ஸ்டன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளியை நிர்வகித்து வந்த கலவலகண்ணன் செட்டி சாரிட்டிஸ் நிர்வாகத்தால் இதனைத் தொடர்ந்து நடத்த இயலாத நிலை காரணமாக இப்பள்ளி நடைபெற்று வந்த இடத்தினை திருக்கோயில் வசம் 13.6.2021 அன்று சுவாதீனம் பெறப்பட்டது.

இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்த விவரம் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாணவச் செல்வங்களின் எதிர்காலம், அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இப்பள்ளியை இந்து சமய அறநிலையத் துறை ஏற்று நடத்த முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, அப்பள்ளி, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் சுவாதீனம் பெறப்பட்ட இடத்தில் 12.5 கிரவுண்ட் இடத்தினை பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களது விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கிலும் விளையாட்டு மைதானமாக மாற்றவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட மிகக்குறைந்த கல்வி கட்டணத்தில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்று, ஏற்கனவே இப்பள்ளியில் பணிபுரிந்த 45 ஆசிரியர்களும், 12 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தொடர்ந்து பணிபுரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையால் தற்போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, மொத்தம் 837 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் 27 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வசதிகளுக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.