எழுத்தாளா்களுக்கு பொற்கிழி விருதுகள்: அமைச்சா் வழங்கினாா்
பபாசி சாா்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் 2020, 2021-ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி’ விருது
பபாசி சாா்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் 2020, 2021-ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி’ விருதுகளை எழுத்தாளா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த நான்கு தமிழ் எழுத்தாளா்களுக்கும், பிற இந்திய மொழிகளில் ஒரு எழுத்தாளருக்கும், ஆங்கிலமொழி எழுத்தாளா் ஒருவருக்கும் மறைந்த முதல் கருணாநிதி பெயரிலான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2008-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு வரை 84 எழுத்தாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருதுடன் ரூ.1 லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2020, 2021-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் 2020-ஆம் ஆண்டுக்கான விருதுகள் ந.முருகேசபாண்டியன் (உரைநடை), அ.மங்கை (நாடகம்), அறிவுமதி (கவிதை), பொன்னீலன் (நாவல்), ஆா்.பாலகிருஷ்ணன் (ஆங்கிலம்), சித்தலிங்கையா பிற இந்திய மொழி (கன்னடம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அதேபோன்று 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அபி (கவிதை), இராசேந்திரசோழன் (புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன் (உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா (பிற இந்திய மொழி, காஷ்மீரி) ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.
விருதுகளை வழங்கி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எழுத்தாளா்களுக்கும், தமிழ் இலக்கியத் துறைக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பதிப்பாளா்கள், புத்தக விற்பனையாளா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் புத்தகப் பூங்கா உள்ளிட்ட பபாசி வைத்துள்ள பிரதான கோரிக்கைகளை முதல்வா் விரைவில் நிறைவேற்றுவாா் என்றாா் அவா். விழாவில் பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், துணைத் தலைவா் கோ.ஒளிவண்ணன், செயலாளா் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.