சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உதவியாளர் மணியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த ஓமலூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் உதவியாளராக இருந்து வந்தார்.
இந்தநிலையில், முன்னாள் முதல்வரின் உதவியாளர் மணி, கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரிடம் போக்குவரத்துத் துறையில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் வந்தது.
புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் மணி, இடைத்தரகர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உதவியாளர் மணி
இதையும் படிக்க | சட்டத்தை இயற்றுபவா்கள் அதன் தாக்கங்களை ஆராய்வது அவசியம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
இதில் உதவியாளர் மணி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பல கோடி மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மணி முன் ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிக்க | காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில் ஆா்வமில்லை: திரிணமூல் காங்கிரஸ்
இதையடுத்து மணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உதவியாளர் மணியை ஞாயிற்றுக்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.