சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலமாக 12 சிற்றுந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணங்களை எளிதாக்க மின்சார பைக், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவை செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல மக்களின் பயன்பாட்டிற்காக சிற்றுந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து காணொலி மூலமாக தொடக்கிவைத்தார்.
ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் போன்ற மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இந்த மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12 சிற்றுந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கோயம்பேடு - மதுரவாயல், மீனம்பாக்கம் - குன்றத்தூர், ஆலந்தூர் - மடிப்பாக்கம், போரூர் ஆகிய வழித்தடங்களில் இரு மார்க்கமாகவும் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2021)தலைமைச் செயலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தைக் குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசால் 2007-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2009 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு சென்னை பெருநகர மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில், பொதுப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தமிழ்நாடுஅரசு நிறைவேற்றி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்துகளின் ஒருங்கிணைந்த இயக்கத்தினை (Multi Modal Integration) உறுதி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் பயணிகள் சிரமமின்றி, விரைவாக பயணம் மேற்கொள்ள. தனி வண்ணத்தில்12 இணைப்பு சிற்றுந்துகள் வாயிலாக தினசரி 148 நடைகள் இயக்கப்படும். அதன்விவரங்கள்பின்வருமாறு:
வழித்தட எண் | புறப்படும் இடம் | சேருமிடம் | இயக்கப்படும் சிற்றுந்துகள் எண்ணிக்கை | நடைகள் |
S82 | ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் | மடிப்பாக்கம் பேருந்து நிலையம் | 2 | 28 |
S84 | ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் | போரூர் | 2 | 28 |
S69 | ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையம் | குன்றத்தூர் | 2 | 20 |
S56 | திருவொற்றியூர் பேருந்து நிலையம் | மணலி | 2 | 24 |
S60 | கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையம் | மதுரவாயல்ஏரிக்கரை | 2 | 24 |
S51 | கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையம் | நொளம்பூர் சக்தி நகர் | 2 | 24 |
| மொத்தம் |
| 12 | 148 |
இதேபோன்று, மற்ற அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழக இணைப்புச் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்., இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்கள்