ஈரோட்டில் தொடர்மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
ஈரோட்டில் தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: ஈரோட்டில் தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட மரப்பாலம் நேதாஜி வீதியில் அங்கமாம்மாள் என்ற மூதாட்டி தனது மகன் ராமசாமி என்பவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை முதல் விட்டுவிட்டு பெய்யத் தொடங்கிய மழையானது இரவு முழுவதும் நீடித்தது. இந்த மழை காரணமாக அங்கம்மாள் வசித்து வந்த ஓட்டு வீடு முழுவதும் ஈரம் பரவியது. இதனால் அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை திடீரென தூங்கிக் கொண்டிருந்த அங்கம்மாள் மற்றும் ராமசாமி மீது விழுந்ததால் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில், அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிக்கொண்ட ராமசாமியை பலத்த காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் அங்கம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.