களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்ட வழங்கல் துறை அதிகாரிகள் குழுவினர் மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் வாகன கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த டாரஸ் லாரியை நிறுத்த சைகை காட்டினர்.
லாரி நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று குழித்துறை அருகே பழைய பாலம் பகுதியில் வைத்து லாரியை மடக்கிப் பிடித்தனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
லாரியை சோதனை செய்தபோது அதில் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியிலும், லாரியை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.