வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் மின் கட்டணம் செலுத்தாததால் கடந்த 6 ஆண்டுகளாக போக்குவரத்து சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியாகும். வெள்ளக்கோவில் நகரம் நாகப்பட்டினம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இவ்வழியாக திருப்பூர், கோவை, உதகை, ஈரோடு, தாராபுரம், திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிதம்பரம் போன்ற மார்க்கங்களில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான அரசு, தனியார் பேருந்துகள், கனரக சரக்கு வாகனங்கள், கார்கள், சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் சென்று வருகின்றன.
மேலும் உள்ளூர் பகுதிகளில் 450 நூற்பாலைகள், இதர தொழில்கள் இருப்பதால் வெள்ளக்கோவில் நகரம் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், விபத்துக்கள், வாகன நெரிசலைக் குறைக்க நகரின் மையப் பகுதி முத்தூர் சாலைப் பிரிவில் சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. ஒரு வருடம் இயங்கியது. பின்னர் நகராட்சி நிர்வாகம் சிக்னலுக்கான மின் கட்டணத்தைச் செலுத்தாததால் கடந்த 6 ஆண்டுகளாக சிக்னல் முடங்கிக் கிடக்கிறது. விபத்துக்களும் தொடர்ந்து வருகின்றன.
இது குறித்து தொகுதியைச் சேர்ந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இதர அரசு அதிகாரிகள், காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை. அவசரமாகச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றன. எனவே சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுநர்கள், பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.