தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாள்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (24 ). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
குழந்தையைக் கட்டைப் பையில் வைத்து கடத்தி செல்லும் பெண்.
இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு அக்டோபர் 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனிடையே, ராஜலட்சுமியிடம் பழகிய 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தன்னுடைய நார்த்தனாருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதற்கு உதவியாக வந்துள்ளதாகவும், உங்களுக்கும் உதவி செய்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய ராஜலட்சுமி தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்வதற்கும் அப்பெண்ணை அனுமதித்தார்.
குழந்தையைப் பறிகொடுத்த ராஜலட்சுமி.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ராஜலட்சுமி வார்டுக்கு வெளியே வந்துவிட்டு உள்ளே சென்றபோது குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது.
மேலும் உடன் பழகிய பெண் கட்டைப் பையுடன் சில நிமிடங்களுக்கு முன்பு சென்றதும் குழந்தையைக் கட்டைப் பையில் வைத்து கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.