சீர்காழி: திருமுல்லைவாசலில் உயிருடன் தீவைத்து கொளுத்தி பின்னர் தூக்கில் தொங்க விட்டுள்ள சம்பவத்தால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் தொடுவாய் செல்லும் சாலையில் மீன் வளர்ச்சிக்கழகம் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள ஷெட்டில் இன்று புதன்கிழமை காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் தூக்கில் இறந்து பிணமாக தொங்கினார்.
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சீர்காழி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தூக்கில் எரிந்த நிலையில் சடலமாக தொங்கியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பூம்புகார் தோட்டாளம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ரவி மகன் குணா(23) என்பது தெரியவந்தது. மீனவரான இவர் திருமுல்லைவாசல் பகுதியில் எரிந்த நிலையில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் தீவைத்து கொளுத்தி பின்னர் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து தப்பிய நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் திருமுலைவாசலில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.