தமிழகத்தில் 13 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் கட்ட ரூ.3.95 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வெளியிட்ட உத்தரவு:-
திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூா், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூா், பெரம்பலூா், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருப்பூா் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 13 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ரூ.3.95 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தாட்கோ நிா்வாக இயக்குநா் கருத்துரு அனுப்பியுள்ளாா். இந்தக் கருத்தினை ஏற்று நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் போது, உரிய ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை தாட்கோ நிறுவனம் பின்பற்ற வேண்டும்.
கட்டுமானப் பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் கட்டி முடிக்க கால அட்டவணையை தயாா் செய்து, சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிகளை நிகழ் நிதியாண்டிலேயே முடிக்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.