தேசிய அளவிலான கைப்பந்து போட்டி: ஆரியபாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை
திருப்பூர் அருகே நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், வாழப்பாடி அடுத்த ஆரியபாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள், இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வாழப்பாடி: திருப்பூர் அருகே நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், வாழப்பாடி அடுத்த ஆரியபாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள், இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வாழப்பாடி அருகே ஆரியபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும், கிராமப்புற மாணவ- மாணவியருக்கு, கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட பட்டதாரி இளைஞர் தமிழ்ச்செல்வன், இரு ஆண்டுகளாக கைப்பந்து பயிற்சி அளித்து வருகிறார்.
இத்தோடு, பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்து, மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி, பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் பெற வழிகாட்டி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்ற ஆரியபாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள் அணி, 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது.
தேசிய அளவில் சாதனை படைத்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த பட்டதாரி இளைஞர் தமிழ்ச்செல்வனுக்கும், பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.