ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாநில தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை செப்.15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கான பணிகளை மாநில தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது.
இதையும் படிக்க- முதுமலை புலிகள் காப்பகம் செப்.3 ல் திறப்பு
இதன்படி, காலை 7 முதல் 5.30 மணி வரை என்பதற்கு பதில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.