திருச்சி: நாட்டு மக்களை கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து காக்க வேண்டி ஸ்ரீரங்கம் உத்திர விதிகளில் 78 வயது முதியவர் அங்கப்பிரதட்சனம் செய்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம், பேரளம் பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர் நாகராஜன். இவர், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சனிக்கிழமை வந்திருந்தார். அப்போது ஸ்ரீரங்கம் நான்கு உத்திர வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டார். நான்கு உத்திர விதியும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவு கொண்டுள்ளது. சுடும் வெயிலில் மேல்சட்டை அணியாமல் தனது உடலை வருத்திக் கொண்டு வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்து அப்பகுதி மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
78 வயது முதியவர் நாகராஜன்
இது தொடர்பாக அவர் கூறுகையில், உலக மக்கள் பூரண நலத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். கரோனா நோய்த்தொற்று நாட்டை விட்டு முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதற்காக வேண்டிக்கொண்டு இந்த நேர்த்திக்கடனை செலுத்தினேன் என்றார்.