கம்பம்: தேக்கடி ஏரியின் கரையோரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள தேக்கடி ஏரி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது.
கேரள அரசு அறிவித்த பொதுமுடக்க தளர்வுகள் எதிரொலியாக, இடுக்கி மாவட்ட சுற்றுலா தளங்களில் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில், முக்கிய பங்கு வகிப்பது தேக்கடி ஏரியில் படகு சவாரி. தற்போது தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகளுக்காககாலை 7 மணி மற்றும் 11 மணி, பிற்பகல் 1 மணி மற்றும் 3 மணி ஆகிய நேரங்களில் ஐந்து படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வியாழக்கிழமை காலை சுற்றுலா பயணிகள் தேக்கடி ஏரியில் படகு சவாரி சென்றனர். அப்போது ஏரியின் கரைப் பகுதிகளில் யானை கூட்டம் சுற்றி திரிந்தது. குட்டி மற்றும் பெரிய யானைகள் கூட்டம் கரை பகுதியில் மிக அருகில் இருந்ததால் சுற்றுலா படகு ஓட்டுநர் கரை அருகே கொண்டு சென்று சுற்றுலாப்பயணிகளுக்கு யானை கூட்டத்தை காண்பித்தார்.
இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் கேமரா மற்றும் செல்லிடப்பேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இதுபற்றி கேரள மாநில சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, காலையில் படகு சவாரி 7 மணி டிரிப்பின் போது வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் ஏரியின் கரைப் பகுதிக்கு வந்து நீர் அருந்தும் படகுச் சவாரியின் முதல் இருப்பின்போது இந்த காட்சிகளை காணலாம் என்று தெரிவித்தார்.