முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா வழக்கு விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மரணம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு உடல்நலக் குறைவால் காலமானார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
நல்லம்ம நாயுடு (கோப்புப் படம்)
பகிர்:

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

சென்னை பெரவள்ளூரில் வசித்து வந்த அவர் உடல் நலக் குறைவால் அவரது இல்லத்தில் இன்று (நவ.16) காலை உயிரிழந்தார்.

1997 முதல் 2015-ஆம் ஆண்டு வரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட இவர், தனது நேர்மையான விசாரணையின் மூலம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சிறைக்கு அனுப்பினார்.

மேலும்,  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் 1961-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று, பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.

சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது, குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:

ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நல்லம்ம நாயுடு மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், அவரோடு பணியாற்றிய சக காவல் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.