துறையூர் அருகே கோயில் விழாவில் தகராறு: பெண் கொலை
துறையூர் அருகே கோயில் விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிடப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார்.
துறையூர்: துறையூர் அருகே கோயில் விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிடப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரிலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒரு நிகழ்வாக திங்கள்கிழமை இரவு அம்மன் வீதி உலாவுக்கான ஏற்பாடு நடந்தது.
அதற்காக அம்மனை யாருடைய டிராக்டரில்ஏற்றி வீதி உலா எடுத்துச் செல்வது என அதேப் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் சந்திரசேகருக்கும், மருதமுத்து மகன் முரளிதரன் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு கோயிலருகே எழுந்து தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து சந்திரசேகரும், அவருடைய தம்பி கார்த்திக்கும் தங்கள் வீடருகே சென்ற போது அங்கிருந்த மருதமுத்து மகன்கள் அருள்(35) முரளிதரன்(32) மற்றும் உறவினர்கள் பிரசாந்த், வினோத் பாண்டியன் ஆகியோர் தாக்கினராம். கண் எதிரே தன் இரண்டு மகன்கள் தாக்கப்படுவதை நேரில் பார்த்த தாய் சிவகாமி சண்டையை விலக்கி விட முயற்சித்த போது அவரையும் முரளி தரப்பினர் தாக்கி கீழே தள்ளியதில் காயமடைந்த அவர் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து துறையூர் போலீஸார் நேரில் சென்று சிவகாமியின் சடலத்தை துறையூர் அரசு மருத்துவமனை அனுப்பி முரளி தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரும் செல்லிப்பாளையத்துக்கு நேரில் சென்று விசாரித்தார்.