அனைத்து மக்களிடமும் செஸ் விளையாட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், கலைஞர்களின் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
அப்போது பேசிய உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், ''சென்னையை சேர்ந்தவன், செஸ் வீரர் என்ற பெருமையுடன் இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளேன்.
நேப்பியர் பாலம் முதல் பால் பாக்கெட்டுகள் வரை அனைத்து இடங்களிலும் செஸ் போட்டி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த முயற்சி.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக அரசுக்கு நன்றி. செஸ் ஒலிம்பியாட் தொடரில் தன்னார்வலர்கள் முகத்தில் சிரிப்புடன் சிறப்பான பணிகளை மேற்கொண்டனர். தற்போது சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.