தமிழ்நாடு

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.
இதுகுறித்து விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அமைச்சர் க.பொன்முடி மேலும் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கவிருந்த பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் ஒத்திவைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், தமிழகத்தில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நீட் தேர்வு முடிவுகள் வராமல் பொதுக் கலந்தாய்வை நடத்தும்போது, மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவம், பொறியியல் படிப்புகள் என இரண்டு கலந்தாய்வுகளுக்கும் மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். மேலும், பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் போது, பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் உருவாகும்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வர காலதாமதம் ஆனதால், முன்பு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போனது. இப்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால் தள்ளிப்போகிறது என்றார் அவர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இணையதளம் வழியாக கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்) கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர்
அறிவித்தார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT