சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 75 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாயும் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021-2022 கார் (காரீப்) கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
படிக்க | ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறித்த படைப்பு: பரிசுத் தொகை இனி ரூ.1 லட்சம்
இந்த ஆண்டும் 2022-2023 கார் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கும் முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், 2022-2023 கார் பருவத்திற்கான நெல் கொள்முதலை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கார் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060 என்றும் நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க ஆணை பிறப்பித்து.
அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2115 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.