முகப்பு
தமிழ்நாடு

மாண்டஸ் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை?

மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Updated On : 9 டிசம்பர், 2022 at 10:02 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:33 PM


மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமாா் 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமாா் 460 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி, வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கக் கூடும்.

Advertisement

இதன் காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.9, 10) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில், சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வெள்ளி மாலை முதல் சனிக்கிழமை காலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக வீசுகின்றன. வெள்ளிக்கிழமை இரவு இப்பகுதியில் கரையை கடக்க உள்ளது. 

சென்னை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக, மோசமான வானிலை நிலவுவதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும், காற்றின் வேகம், மழை அளவை பொறுத்து இன்னும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் எனவும், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 
கனமழை பொழி எச்சரிக்கை அடுத்து  செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.