திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 10 ஆயிரம் கன அடியாக உபரி நீர் திறந்துவிட்ட நிலையில், திங்கள்கிழமை காலை முதல் 6,000 கன அடியாக குறைக்கப்பட்டதாகவும், சென்னைக்கு குடிநீருக்காகவும் மற்றும் இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 250 கன அடி திறந்துவிட்டுள்ளதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பூண்டி நீர்த்தேக்கமாகும். இந்த நிலையில் மாண்டஸ் புயலால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கான நீர்ப்பிடிப்புப் பகுதி, மழைநீர், கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்தது.
இந்த நிலையில் 3231 மில்லியன் கன அடியில், 2950 மில்லியன் கன அடி இருப்பு இருந்தது. அதோடு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி 10 ஆயிரம் கன அடி நீர் ஆட்சியரின் உத்தரவின் பேரில் திறந்துவிடப்பட்டது.
இதையும் படிக்க | நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
அதைத் தொடர்ந்து மழைக்கான நீர் வரத்து குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை நளளிரவு முதல் 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரை 3,000 அடியாக குறைத்து நள்ளிரவு முதல் 7,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை முதல் 6,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, திங்கள்கிழமை காலை நிலவரப்படி 35 அடி உயரத்தில் 34.05 அடியும், 3231 மில்லியன் கன அடியில் 2839 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை அளவு: திருவள்ளூர்- 85, ஊத்துக்கோட்டை, ஆவடி தலா 50, ஜமீன் கொரட்டூர்- 46, தாமரைபாக்கம்- 44, பூந்தமல்லி - 41, பொன்னேரி-18, சோழவரம்-15, திருவாலங்காடு-13, ஆர்.கே.பேட்டை-12, கும்மிடிப்பூண்டி-9, திருத்தணி-6 என 424 மி.மீ, சராசரியாக 28.28 சதவீதம் மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.