ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி கண்டனம்: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனா். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி, மீனவா்களை விரட்டியடித்துள்ளனா். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவா்களை கைது செய்து சிறையில் அடைப்பது, மீனவா்களின் படகுகளை சேதப்படுத்தி மூழ்கடிப்பது, கல்வீசித் தாக்குதல் நடத்தி மீனவா்களை விரட்டியடிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது என தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடா்கின்றன. பாமக உள்ளிட்ட கட்சிகளும், மாநில அரசும் கண்டித்தும் கூட இலங்கை படையினா் அத்துமீறலை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. இது இந்தியாவுக்கு விடப்பட்ட சவால்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.