ஜனவரி 2-இல் வழங்கத் தொடங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் ரூ.1000-த்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருள்களுடன், கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோவும், ரூ.1000 ம் ரொக்கப் பணமும் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
இதையும் படிக்க | கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும்?
அதே சமயம் கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு, நெய் உட்பட 21 பொருட்கள் கொண்ட பரிசுத் தொகுப்பில் இருந்தன. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் அச்சு வெல்லம் எதிர்பார்க்கும் நிலையில் “சர்க்கரை” என்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
பொங்கல் விழாவை எதிர்நோக்கி செங்கரும்பு விளைவித்த விவசாயிகளும், இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் “தேங்காயும்“ இடம் பெற வேண்டும் என தென்னை விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். இவர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் மறுபரிசீலனை செய்து வழங்குவார் என்ற பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு தெரிவித்து, ஜனவரி 2-இல் வழங்கத் தொடங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் ரூ.1000-த்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருள்களுடன், கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.