3 பேர் தீக்குளிக்க முயற்சி: ஆக்கிரமிப்பு வீடுகள் சீல் வைப்பது நிறுத்தம்!
சிதம்பரம் குருநமச்சிவாயர் மடம் ஆக்கிரமிப்பு வீடுகளை சீல் வைக்கும்போது மூவர் தீக்குளிக்க முயன்றதால் சீல்வைப்பு நிறுத்தப்பட்டது.
சிதம்பரம் குருநமச்சிவாயர் மடம் ஆக்கிரமிப்பு வீடுகளை சீல் வைக்கும்போது மூவர் தீக்குளிக்க முயன்றதால் சீல்வைப்பு நிறுத்தப்பட்டது.
சிதம்பரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள குருஞானசம்பந்தர் மட இடத்தில் உள்ள 24 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நகராட்சி, வருவாய் துறை, இந்து அறநிலையத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைக்க சென்ற போது பொதுமக்கள் மற்றும் கம்யூ , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்போது மூவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் வேங்கான் தெருவில் பிரசித்தி பெற்ற குருநமச்சிவாயர் மடத்திற்கு சொந்தமான இடத்தில் விநாயகர், ஆத்மநாதர், யோகாம்பாள், குருநமச்சிவாயர் ஆகிய கோயில்கள் உள்ளது. கோயில் வளாகத்தில் அருகில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 24 வீடுகளை காலி செய்து 28-12-2022 அன்று சீல் வைத்து அறநிலையத்துறையினர் ஒப்படைக்குமாறு வாஞ்சிநாதன் என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாவண்ணமும், பாதுகாப்பு வழங்கிடவும் உரிய காவலர்களை அனுப்பி வைத்திட வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து புதன்கிழமை அன்று வட்டாட்சியர் ஹரிதாஸ் சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், ஏஎஸ்பி ரகுபதி, இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் தேன்மொழி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைக்க சென்றனர்.
அப்போது அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூடினர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ராஜா, எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகர காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், திமுக துணை செயலாளர் பா.பாலசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் ராஜராஜன் ஆகியோர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டனர்.
அப்போது தீடீரென ஆக்கிரமிப்பு வீடுகளைச் சேர்ந்த ரகு, மாலா, சாவித்திரி ஆகிய 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் மறித்து அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 நாள்கள் ஜன.6-ம் தேதி வரை காலம் அவகாசம் வழங்கியும், அப்படி தவறினால் ஜன.7-ம் தேதி கண்டிப்பாக சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எழுதி கொடுத்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிக்க: இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 98.8% உயர்வு!
சிதம்பரம் வேங்கான்தெரு குருநமச்சிவாயர் மடத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.