சென்னை பெத்தேல் நகரில் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதி, நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாக சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2019ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டதை
அடுத்து கடந்த மாத விசாரணையில், 'பாரபட்சமின்றி அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில் சென்னை பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேலும் இருவர் தொடர்ந்த வழக்கும் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து, வழக்கின் இன்றைய விசாரணையில், சென்னை பெத்தேல் நகரில் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து குடியிருப்பு நலச் சங்கத்திடம் ஆலோசனை செய்து பிப். 9 ஆம் தேதி முடிவைத் தெரிவிக்குமாறு மனுதாரரிடம் கூறி வழக்கை அன்றைய தினத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.