விருதநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவனையில் பரோல் விடுப்பில் உள்ள ராஜீவ் கொலையாளி ரவிச்சந்திரனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் உடற்பரிசோதனை செய்யப்பட்டு முதலுதவிச்சிகிச்சையும் செய்யப்பட்டது.
ராஜீவ் கொலையாளி ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி 30 நாட்கள் பரோல் விடுப்பு கிடைத்து சிறையிலிருந்து வெளிவந்து, தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரப்ப நாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் அவருடன் தங்கியுள்ளார்.
அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் மேலும் 30 நாட்கள் பரோல் விடுப்பு நீட்டிக்கப்பட்டு, அதையடுத்து இரண்டாவது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் விடுப்பு நீட்டிப்பு கிடைத்தது.
இதனால் அவர், உடல்நிலை சரியில்லாத தனது தாயுடன் தங்கி தொடர்ந்து அவரைப் பராமரித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை ரவிச்சந்திரனுக்கு திடீர் படபடப்பு, சோர்வு ஏற்பட்டதால் அருகிலுள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்பரிசோதனைக்காகக் கொண்டுவரப்பட்டு, உரிய முதலுதவி சிகிச்சைகள் முடிந்ததும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரவிச்சந்திரன் வந்ததால் மருத்துவமனை வளாகத்திலிருந்த பார்வையாளர்கள், பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.