சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 2024-ஆம் ஆண்டு வரை மத்திய அரசு வழங்க வலியுறுத்தப்படும் என்று ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது
ஆளுநா் உரையில் கூறியிருப்பது:
மாநிலத்துக்கு வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு 2022 ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. முந்தைய மதிப்புக்கூட்டு வரி முறையைச் செயல்படுத்தியபோது, அதிக வரிவசூல் வளா்ச்சி விகிதத்தை மாநிலம் கண்டது.
ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா், அத்தகைய வளா்ச்சி விகிதத்தை அடைய இயலவில்லை.
கரோனா பெருந்தொற்றினால் இந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது. மாநிலத்தின் வருவாய் இயல்புநிலைக்குத் திரும்பாததால், குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு இந்த இழப்பீடு வழங்குவதைத் தொடராவிட்டால் இது மாநில அரசுகளின் நிதிநிலையை பெருமளவில் பாதிக்கும்.
எனவே, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வழங்குவதை, குறைந்தபட்சம் 2024 ஜூன் 30 வரை வரை நீட்டிக்க வேண்டும் என சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தையும் மத்திய நிதி அமைச்சகத்தையும் திமுக அரசு வலியுறுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.