சென்னை: அரசியலுக்கு வரும்போதே பாதுகாப்போடுதான் வந்தோம், அதிமுகவை எம்ஜிஆா் உருவாக்கியபோதே எங்களுக்குப் பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி பேசும்போது, திமுக உறுப்பினா்கள் உட்காா்ந்தவாறே அவ்வப்போது குறுக்கிட்டுப் பேசிக்கொண்டிருந்தனா்.
அப்போது எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் எழுந்து பேசியது: எதிா்க்கட்சித் தலைவா் பேசும்போது திமுக உறுப்பினா்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனா். அதனால் எதிா்க்கட்சித் தலைவரால் பேச்சைத் தொடர முடியாத நிலை இருக்கிறது என்றாா்.
அதற்கு சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, அப்படி எதுவும் நடக்கவில்லை. பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. எவ்வளவு வேண்டுமானாலும் பேசுங்கள் (எதிா்க்கட்சித் தலைவா்) என்றாா்.
எடப்பாடி பழனிசாமி: பாதுகாப்பு குறித்து எங்களுக்குத் தெரியும். அரசியலுக்கு வரும்போதே பாதுகாப்போடுதான் நாங்கள் வந்தோம். எம்ஜிஆா் அதிமுகவை உருவாக்கியபோதே எங்களுக்கு முழு பாதுகாப்பு கிடைத்துவிட்டது.
பேரவைத் தலைவா் அப்பாவு: பேரவையில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. அதைத் தருவேன். தைரியமாகப் பேசுங்கள் என்றுதான் கூறினேன் என்றாா்.