ஜன. 9ல் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்!
வருகிற ஜனவரி 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கானத் தேர்வுகள் ஜனவரி 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
வருகிற ஜனவரி 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கானத் தேர்வுகள் ஜனவரி 11 ஆம் தேதி(செவ்வாய்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பரவலினால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வுகள் முற்பகல், பிற்பகல் என இரு தேர்வுகள் நடைபெறவிருந்தன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருந்தாலும் தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது.
Advertisement
இந்நிலையில், முழு ஊரடங்கு நாளில் தேர்வர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் உணவுக்கான வசதி இல்லாத சூழலில், தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டும், தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், தேர்வு வருகிற ஜனவரி 11 ஆம் தேதிக்கு (செவ்வாய்கிழமை) மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டினை பயன்படுத்தி அதில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் ஜனவரி 11 ஆம் தேதி தேர்வு எழுதிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.