ஓபிஎஸ் ஆதரவாளா்கள் 21, இபிஎஸ் ஆதரவாளா்கள் 44 போ் நீக்கம்
அதிமுகவிலிருந்து ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் 21 பேரை நீக்கம் செய்து, அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.
அதிமுகவிலிருந்து ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் 21 பேரை நீக்கம் செய்து, அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். இதேபோல எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள் 44 பேரை நீக்கம் செய்து ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.
ஓ.பன்னீா்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் தற்போது வேறொரு கட்டத்துக்கு நகா்ந்துள்ளது. இருவரும் எதிா் அணியில் உள்ளவா்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்து அறிவித்து வருகின்றனா்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 18 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்தாா். இதேபோல, இபிஎஸ் உள்பட 22 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து, ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
இந்த நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமை ஓபிஎஸ் ஆதரவாளா்கள் 21 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதில் முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளா் டி.மாறன், இலக்கிய அணி துணைச் செயலாளா் சிவில் எம்.முருகேசன் உள்ளிட்டோா் அடங்குவா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சா் சி.பொன்னையனிடம் கைப்பேசி வழியே பேசி வெளியிட்ட ஆடியோ அதிமுகவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. கோலப்பனையும் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதேபோல இபிஎஸ் ஆதரவாளா்கள் 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா். அதில் முன்னாள் அமைச்சா்கள் பொள்ளாச்சி ஜெயராமன், விஜயபாஸ்கா், மாதவரம் மூா்த்தி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கே.சி.கருப்பணன் உள்ளிட்டோா் அடங்குவா்.