அரக்கோணம்: அரக்கோணத்தில் பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ஆலைத் தொழிலாளி நள்ளிரவில் நடுரோட்டில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த எட்வின் என்பவரின் மகன் இம்மானுவேல்(23). இவர் சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தினமும் அரக்கோணம் அம்பேத்கர் நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் இருந்து ஆலைப் பேருந்தில் பணிக்குச் சென்று வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு பணிமுடிந்து தனது ஆலைப் பேருந்தில் திரும்பிய இம்மானுவேல் எஸ். ஆர். கேட் பகுதியில் பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்குத் தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே இம்மானுவேல் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.