திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கள்ளக்குறிச்சி சம்பவம் மூலம் ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனா். காவல் துறையினா் மீது மரியாதை இழந்து விட்டனா். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறாா்.
உளவுத் துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆா்வமாக உள்ளாா். மாணவியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாதவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் உள்ளாா். இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
தவறு யாா் செய்திருந்தாலும் அவா் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அந்த மாவட்டத்தைச் சேராதவா்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.