முகப்பு
தமிழ்நாடு

'தனியார் பள்ளிகள் நாளைமுதல் வழக்கம்போல் இயங்கும்'

தமிழகம் முழுவதும் நாளைமுதல் (ஜூலை 19) தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் நாளைமுதல் (ஜூலை 19) தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து, தனியார் பள்ளிகள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் நேற்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி ஒரு சில தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், தமிழகம் முழுவதும் 91% பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதனைத் தொடர்ந்து நாளைமுதல் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வந்தது.

அந்தவகையில் நேற்று (ஜூலை 17) நடைபெற்ற போராட்டத்தில், கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பள்ளியை முற்றுகையிட்டு பேருந்துகளை எரித்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறையினரும், பொதுமக்களும் படுகாயமடைந்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.