கலைகள் மானுடத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும்: முதல்வர்
முத்தமிழ்ப் பேரவையின் 41-ம் ஆண்டு இசை விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இசைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
முத்தமிழ்ப் பேரவையின் 41-ம் ஆண்டு இசை விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில் முதல்வர் பேசியதாவது:
"நான் இசையை ரசிப்பேன், சினிமாப் பாடல்களைப் பாடும் அளவுக்குதான் இசை ஆர்வம் எனக்கு உண்டு.
நாடகமாக இருந்தாலும், இசையாக இருந்தாலும், இயல் இலக்கியமாக இருந்தாலும் அவை அனைத்தும் மக்களின் உணர்வோடு கலந்த கலையாக இருக்கின்றன. உணர்வோடு கலந்த கலையாக இருந்தால்தான் அவை மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. இக்கலைகளின் நோக்கம் மக்களை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும்.
இன்றைக்கு இசையானது பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது. எத்தனை இசைகளாக வந்தாலும், வளர்ந்தாலும் அவை அனைத்தும் தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
இசையைக் காக்க இயக்கம் நடத்திய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
கலைகள் மனதுக்கு இதமானதாக மட்டுமல்ல, மானுடத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும்! கலையும் வளர வேண்டும்! மக்களும் வளர வேண்டும்! அத்தகைய கலையை வளர்க்கும் அமைப்பாக இருக்கக்கூடிய இந்த முத்தமிழ்ப் பேரவையை நான் வாழ்த்துகிறேன், போற்றுகிறேன்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
விருதுகள்:
- இயல் செல்வம் விருது - த.செ. ஞானவேல்
- இசை செல்வம் விருது - ராஜ்குமார் பாரதி
- ராஜ ரத்னா விருது - ஷேக் மெஹபூப் சுபானி, காலீஷாபி மெஹபூப்
- நாட்டிய செல்வம் விருது - வி.பி. தனஞ்சயன், சாந்தா தனஞ்சயன்
- நாதஸ்வர செல்வம் விருது - நாகேஷ் ஏ. பப்பநாடு
- தவில் செல்வம் விருது - பா. ராதாகிருஷ்ணன்