யார் தலைமை? ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தனித்தனியே ஆலோசனை
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக ஒற்றைத் தலைமை தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஓ.பி.எஸ் 2-வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்.
எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனையில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அதிமுக எம்எல்ஏக்கள் சிலரும் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து பேசி வருகின்றனர்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையேற்க ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சிலரும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக சிலரும் மாறி மாறி சுவரொட்டிகள் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து விவாதிக்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.