அக்னிபத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டின் ஆளுநரும், முதல்வரும் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாக அதிகபட்சம் நாலாண்டுகள் மட்டுமே பணிபுரியும் 'அக்னிபத்' திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14 ஆம் தேதி அறிமுகம் செய்தார்.
இந்தத் திட்டத்திற்கு நாட்டின் வட மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ந்து 4ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டங்கள் தற்போது தென் மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் ஆளுநர் மற்றும் முதல்வர் தெரிவித்துள்ள கருத்து ஒன்றுக்கொன்று முரணை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவடு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அக்னிபத் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | 'அக்னிபத்' திட்டம் என்றால் என்ன? அச்சங்களும் அச்சுறுத்தல்களும்
இளைஞர்களுக்கு ஊதியத்துடன் பலனளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபத் திட்டம் வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்த ஆர்.என்.ரவி இத்திட்டம் குறித்த தவறான புரிதலால் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் அக்னிபத் திட்டம் தொடர்பாக சனிக்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்னிபத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழ்நாட்டின் ஆளுநர் ஒரு கருத்தும், முதல்வர் வேறொரு கருத்தும் வெளியிட்டுள்ளது அக்னிபத் திட்டம் குறித்து மாநில அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு, புதியக் கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் ஆளுநர், முதல்வர் இடையே மாறுபட்ட நிலைப்பாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.