திருப்பூரை அடுத்த குண்டடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட உயிரி ரசாயனத் (பயோ - கெமிக்கல்) தொழிற்சாலைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் அருகேயுள்ள தேர்ப்பாதையிலிருந்து கெத்தல்ரேவ் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இது மஞ்சள் தொழிற்சாலை எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அதில் மஞ்சள் ஏதும் அரைப்பதில்லை எனவும் அங்கு வேறு ஏதோ கெமிக்கல் சார்ந்த தொழில் நடப்பதாக கெத்தல்ரேவ் ஊராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின்பேரில் குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிஹரன், செல்லமுத்து, கெத்தல்ரேவ் ஊராட்சித் தலைவர் சரண்யா, செயலாளர் சுமதி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில் தொழிற்சாலையில் மஞ்சள் சார்ந்த எந்தவிதமான பணியும் நடைபெறாமல் பயோ கெமிக்கல் சார்ந்த தொழில் நடைபெற்று வந்தது தெரியவந்தது. ஆகவே, முறையான அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்ததற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் வேறு ஏதேனும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.