மானாமதுரை அருகே மகா சிவராத்திரியில் தவக்கோல சிவனுக்கு குடமுழுக்கு விழா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே தஞ்சாக்கூரில் அமைந்துள்ள தவக்கோல சிவனுக்கு மகா சிவராத்திரியில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே தஞ்சாக்கூரில் அமைந்துள்ள தவக்கோல சிவனுக்கு மகா சிவராத்திரியில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
தஞ்சாக்கூரில் ஒரே இடத்தில் ஸ்ரீ ஜெயம் பெருமாள், ஸ்ரீ ஜெகதீஸ்வரர், ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயம் பெருமாள் கோயிலில் பெருமாளின் பத்து அவதாரங்களுக்கும் தனி சன்னதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியர் கோயிலில் 18 சித்தர்களுக்கும் தனி சன்னதிகள் அமைந்துள்ளன. சுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் ராகு, கேது பகவானுக்கு தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுப்பிரமணியர் கோயிலில் தென் மாவட்டங்களில் முதலாவதாக நீண்ட உயரத்திற்கு தவக்கோலத்தில் சிவன் சிலை வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெகதீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது. சிவராத்திரி தினத்தன்று இரவு ஜெகதீஸ்வரர், சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.
Advertisement
அதைத்தொடர்ந்து தவக்கோல சிவனுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதையொட்டி சிவன் சிலை முன்பாக வேள்வி நடத்தி தீபாராதனை காட்டப்பட்டதும் சிவனுக்கு கலச நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடந்தது. கூடலூர் மகா சக்தி பீடத்தின் தவத்திரு சுந்தரவடிவேல் சுவாமிகள் யாக வேள்வியை நடத்தி வைத்து ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
திரளானோர் விழாவில் பங்கேற்று தவக்கோல சிவனை கண்டு தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இரவில் ஜெகதீஸ்வரர், ஜெயம் பெருமாள், சுப்பிரமணியர் கோயில்கள், சிவன் சன்னதி ஆகியவை மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான பால சுப்பிரமணியன் சுவாமிகள் செய்திருந்தார்.