முகப்பு
தமிழ்நாடு

3.42 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏற்றுக் கொண்ட 'அரண்' உறுதிமொழி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 'அரண் இயக்கம்' சார்பில் 3.42 லட்சம் மாணவர்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறார் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் உள்ளிட்டவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும், மன தைரியத்துடன் அவற்றை எதிர்கொள்வதற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட 'அரண் இயக்கம்' சார்பில் 3.42 லட்சம் மாணவர்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தையொட்டி திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தைச் சேர்ந்த 1,967 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 21 கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் அவரவர் கல்வி நிலையங்களில் இருந்தே பங்கேற்று உறுதிமொழியேற்றனர்.

புதுக்கோட்டை நகரிலுள்ள திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழியேற்பில், 'அரண்' இயக்கத்தைத் தொடங்கிய நிறுவனரான மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்று மாணவிகளுடன் உரையாற்றினார்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உடல், உணர்வு அல்லது வாய்மொழி வழி வன்கொடுமைகளில் ஈடுபடமாட்டேன்; பாலியல் வன்கொடுமை எனக்கு நிகழ்ந்தாலோ, யாருக்கேனும் நிகழ்ந்தாலோ உடனடியாக ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிப்பேன்; போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இணையதளத்தைப் பயன்படுத்துவேன் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இந்த உறுதிமொழியில் இடம்பெற்றுள்ளன.

வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன், மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம், மாவட்டக் கல்வி கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜோஸ்பின்மேரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

மாவட்ட நி்ரவாகத்தின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த அரண் இயக்கம், தொடக்கத்தில் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையிலான விடியோ காட்சி ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.